TamilsGuide

திருட்டு போன 64 ஆயிரம் ரூபா - முட்டை மீது சத்தியம் வாங்கிய அதிபர்

பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள் சிலர் கூறியபோதும் அதிபர் முறைப்பாடு செய்யாமல் இருப்பதாக பாடசாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

நவராத்திரி விழாவுக்காக மாணவர் ஒருவரிடம் இருந்து 150 ரூபா பெறப்பட்டு மொத்தமாக 64 ஆயிரம் ரூபா சேர்ந்துள்ளது.

எனினும் இரு நாட்களுக்கு பின்னர் பணம் களவுபோய்விட்டதாக அதிபர் கூறினார் என ஆசிரியர்கள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள், மாணவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் பாடசாலை அதிபர் பூசாரி ஒருவரிடம் சென்று முட்டை ஒன்றை மந்திரித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சத்தியம் பெற்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது
 

Leave a comment

Comment