TamilsGuide

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் - புதனன்று விசாரணை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தினுள் காரசாரமான விவாதம் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவால் தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த சமத்துவம் தொடர்பாக விசாரணை நடத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் பிரதி சபாநாயகருக்கு மேலதிகமாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தக் குழு கூடவுள்ளது.
 

Leave a comment

Comment