TamilsGuide

வவுனியாவில் ஆயுதம், தங்கம் தேடி அகழ்வு

யுத்த காலத்தில், வவுனியா புதிய கோவில்குளத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் பொலிஸார் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டனர். தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
 
இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு பெக்ஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் வாசிம் அகமது உத்தரவிட்டார்.

குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பூவரசங்குளம் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். 

Leave a comment

Comment