TamilsGuide

மட்டக்களப்பில் இன்று ரணிலுக்கு எதிராக போராட்டம்! - சாணக்கியன் அழைப்பு

மட்டக்களப்பில் இன்று ஜனாதிபதிக்கு எதிரான பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவினை வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.
  
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஒரு கள்ளன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,அவருடன் இணைந்து வருபவர்களும் அவரைப்போன்ற கள்வர்கள்தான் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற அவசர ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பில் புரட்சியேற்பட்டு விடும் என்ற பயத்திலே கிழக்கிலிருக்கும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலுமிருந்து வாகனங்களை எடுத்துவந்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.அத்துடன் மயிலத்தமடு மாதவனை பண்ளையாளர்கள் போராடிவரும் நிலையில் அவர்களின் போராட்டத்தினை நிறுத்தும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவினை எடுத்து மிக கேவலமான செயற்பாடுகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இன்று நாங்கள் பிச்சையெடுத்தும் வாழும் நிலைக்கு இந்த அரசாங்கம் எங்களை தள்ளியுள்ளது என்றளவுக்கு இன்றைய போராட்டம் பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்ணையாளர்களின் பிரச்சினையை வெறும் பண்ணையாளர்களின் பிரச்சினையாக மட்டும்பார்க்கவேண்டாம்.

இது வடகிழக்கு தமிழர்களின் நிலம் தொடர்பான பிரச்சினை.மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சிங்கள குடியேற்றங்களை செய்வதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கு பின்னால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்ற கள்ளர்கள் உள்ளார்கள்.

சின்னவத்தையில் சிங்கள மக்களின் பூர்வமாக காணிகள் என்று கூறிக்கொண்டு தமது சகோதரர்களுக்கு காணிகளை களவாடிக்கொடுத்தவர்.அவர் ஒரு கள்ளனும் அவருடன் இணைந்த கள்ளனுகளும் இன்று போராடினார்கள். சுமனரத்ன தேரருடன் வந்த பிக்குவே கடந்த காலத்தில் மதகுருமார்கள்,ஊடகவியலாளர்களை மயிலத்தமடுவில் சுமார் ஆறு மணிநேரம் தடுத்துவைத்தவர்.

Leave a comment

Comment