பிரித்தானிய இளவரசி டயானாவின் குழந்தை பருவ வீட்டினை அவரது சகோதரர் தற்போது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் இணைய பக்கத்தில் இது தொடர்பில் பதிவு செய்துள்ளார். ஆனால் எலிசியன் எஸ்டேட்ஸ் நிர்வாகம் வாடகை கட்டணத்தை வெளியிடவில்லை.
1688ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகையானது ஸ்பென்சர் குடும்பத்தினரின் பரம்பரை குடியிருப்பாகவே இருந்துள்ளது. மிகப்பெரிய உணவருந்தும் அறை, ஒரு தேவாலயம், பில்லியர்ட் அறைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் தொகுப்பு என இந்த மாளிகையில் காணப்படுகிறது.
எலிசியன் எஸ்டேட்ஸ் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஓவல் ஏரி பகுதியிலேயே 1997ல் இளவரசி டயானா அடக்கம் செய்யப்பட்டார். அதனால், தற்போது வாடகைக்கு விடப்பட்டாலும், கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியானது வாடகைதாரர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
2013ல் ஒரு இரவுக்கு 25,000 பவுண்டுகள் கட்டணத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதித்த விவகாரத்தில் ஏர்ல் ஸ்பென்சர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.