TamilsGuide

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்  இலங்கையை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத போராட்டம் முறியடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக பௌத்த விகாரைகள் கட்டப்படும் சில இடங்களில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த சட்டத்தினை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு இலங்கை உறுதியளித்திருந்த போதும்  இதுவரையில் அது நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதிலும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment