இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவி டயானா 1997-ம் ஆண்டு கார் விபத்தில் தனது 36-ம் வயதில் பலியானார். இந்நிலையில் இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்திற்கு வருவதும் அவை அதிக விலைக்கு ஏலம் போவதும் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 1981-ம் ஆண்டு இளவரசர் சார்லசுடன் கோல்ப் போட்டி ஒன்றுக்கு டயானா இந்த ஸ்வெட்டரை அணிந்து சென்றிருந்தார். வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்ட இந்த ஸ்வெட்டரில் ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் இருந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. 1983-ம் ஆண்டு இந்த ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார். தற்போது அந்த ஸ்வெட்டர் ஏலத்திற்கு வந்த போது 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும். இதற்கு முன்பு டயானா பயன்படுத்திய பொருட்களில் அவர் அணிந்திருந்த ஊதா நிற கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனது. அதிக விலைக்கு ஏலம் போன பொருளாக இருந்தது.
TamilsGuide