TamilsGuide

கனடாவில் துயரத்தில் முடிந்த திருமண விழா

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் திருமண விழா ஒன்று முன்னெடுக்கப்பட்ட மண்டபம் வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் பொலிசார், தொடர்புடைய துப்பாக்கிச் சூடு இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டருக்கு வெளியே நடந்தது என தெரிவித்துள்ளனர்.
  
இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 20 முதல் 25 முறை துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஞாயிறன்று மதியத்திற்கு மேல் பொலிசார் வெளியிட்ட தகவலில்,

கொல்லப்பட்ட இருவரும் ரொறன்ரோ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் 26 வயதான முகமது அலி, இன்னொருவர் 29 வயதான அப்திஷாகுர் அப்தி-தாஹிர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், இது ஒரு இன வெறுப்பு காரணமாக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு பிறந்ததில் இருந்து ஒட்டாவா பகுதியில் மட்டும் இதுவரை 12 பேர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். காயங்களுடன் தப்பிய 6 பேர்கள் தொடர்பில் தகவல் திரட்டி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

Leave a comment

Comment