TamilsGuide

மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆடிக்  கொண்டாட்டம்

‘ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்’ எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு இன்று (17) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு ஆடி மாதத்தின் சிறப்பு குறித்து விசேட சொற்பொழிவு இடம் பெற்றது.மேலும் வெசாக் பக்தி கீதத்தில் பங்குபற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ரன் விம வீடமைப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 4 பேருக்கு முதல் கட்டமாக தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள்  வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக மன்னார் மாவட்டச் செயலகத்தின் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனின் சேவையைப்  பாராட்டி அவருக்கு விசேட விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment