ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக்ச குடும்பம் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு புதிய மூலோபாய முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தின் பல தலைவர்களும் செயலர்களும் சிறைத்தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், அரசியல் நடவடிக்கைகளைத் தொடர, எந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புதிய நபரை முன்னிறுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் பல முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து ராஜபக்சக்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதால், மக்களிடையே எவ்வித சர்ச்சையுமற்ற, எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத ஒரு புதிய முகத்தை குடும்பத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, எதிர்கால அரசியல் செயல்பாடுகளையும் தலைமைத்துவத்தையும் அந்தப் புதிய நபரிடம் ஒப்படைக்க கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் அதிருப்தியை எதிர்கொண்டு, குடும்பத்தின் பாரம்பரியத் தலைவர்கள் பின்வாங்கி, பின்னணியில் இருந்து வழிநடத்தும் அதே வேளையில், முன்னணியில் இருந்து தூய்மையான பிம்பத்துடன் ஒரு புதிய தலைமையை உருவாக்குவதே இதன் நோக்கம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


