முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
எனினும், ஷிரந்தி ராஜபக்ஷ முன்னதாக FCID-யினால் விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருக்கவில்லை என ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்ற ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் பயணிக்கவிருந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் புறப்படுவதற்கு சற்று முன்னர், புறப்படும் வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் குறித்த அழைப்புக் கடிதத்தை கையளித்ததாக அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அவர் விமான நிலையத்துக்கு வந்த பின்னரே, நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஏற்கனவே FCID-யினால் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்த குடும்ப உறுப்பினர் நிராகரித்துள்ளார்.
அத்துடன், விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் FCID-யிடமிருந்து எவ்வித அழைப்பாணையையும் ஷிராந்தி ராஜபக்ஷ பெற்றிருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


