TamilsGuide

மன அழுத்தத்தை போக்க கடலை நோக்கி சத்தமிட்ட சென் பிரான்சிஸ்கோ மக்கள்

அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,   நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மக்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதற்கான வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சென் பிரான்சிஸ்கோவின் ஓஷன் பீச் கடற்கரையை ஒட்டியுள்ள ‘விஸ்டா டெல் மார்’ (Vista del Mar )பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

“கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு” என்ற பெயரில் சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் (Daniel Egan ) என்பவரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் உருவாகும் வேலைவாய்ப்பு குறித்த அச்சம், தனிமை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதற்காக மக்கள் இதில் பங்குபற்றனர்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, குரலின் ஒலி அளவு, நீடிக்கும் காலம் மற்றும் கத்தும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியொன்றும் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண் 121.9 டெசிபல் அளவில் உரக்கச் சத்தமிட்டதன் மூலம் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு சிறிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

உரக்கச் சத்தமிடும் போட்டிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு குரல் தசைகளைத் தயார்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக, மாலை வேளையில் போடிடியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கக் சத்தமிட்டுள்ளனர்.

நிகழ்வின் நிறைவில், பங்கேற்பாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பழங்களைப் பகிர்ந்து உண்டு, சமூக ரீதியாக ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நிறைவு செய்தனர்.
 

Leave a comment

Comment