TamilsGuide

கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம் - காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு

கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.

கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது. பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.

மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும்.

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment