கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.
இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது.
அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது. கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.
பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.


