சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.


