TamilsGuide

கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது என அமெரிக்க எல்லைகளை பெயர் பலகை

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க எல்லையோரங்களில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறாது" என்ற வாசகம் அடங்கிய புதிய அறிவிப்புப் பலகைகளை நிறுவ உள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார்.

அமெரிக்க எல்லைச் சாவடிகளில் நிறுவப்படவுள்ள இந்தப் பலகைகளில் "பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வரவேற்பு. வலிமையான, பெருமைமிக்க கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது. மன்னிக்கவும்" என்று எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வனவிலங்குகள் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் "கனடியர்களின் அன்பை பலவீனம் எனத் தவறாக நினைக்க வேண்டாம்" போன்ற விழிப்புணர்வு செய்திகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

கனடாவின் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடியாக 27.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு 15% முதல் 50% வரை இறக்குமதி வரிகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலுமுள்ள வேலைவாய்ப்புகளும் வணிகங்களும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட முதல்வர், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பிய பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா மீதான தங்கிவாழும் தன்மையைக் குறைப்பது பொருளாதார ரீதியாகச் சவாலானது என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் விடுவது அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கனடியப் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வர்த்தகப் போரைத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டிய டேவிட் ஈபி, கனடியர்கள் இந்த மோதலைத் தொடங்கவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.   

Leave a comment

Comment