கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் ஆசிரியர் தொழில் செய்ய ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியோடர் டொனால்ட் எவால்ட் என்ற இந்த ஆசிரியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, மாகாண ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையருடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி படிப்பை முடித்து வெளியேறிய ஐந்து மாதங்களின் பின்னர், ஆசிரியர் அவருடன் தகாத உறவைத் தொடங்கியுள்ளார். இந்த உறவு சுமார் ஆறு மாதங்கள் நீடித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு பலவீனமான சூழலில் இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் சார்ந்த கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருந்த ஆசிரியர், மாணவியின் பழங்குடி கலாச்சார ஆர்வத்தைப் பயன்படுத்தி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் குறித்த மாணவியை இரவுக் பயணமொன்றிற்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டுள்ளதுடன், உறவை முடித்துக் கொண்ட பின் மாணவியின் தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.
ஆசிரியரின் இந்தச் செயல் "ஒரு ஆசிரியருக்குப் பொருத்தமற்ற நடத்தை" என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனது ஆசிரியர் பதவியையும், பழங்குடியின மாணவியின் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் மாணவியின் மனநலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகிய காரணங்களால் இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தியோடர் இனி பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசிரியராகப் பணியாற்றவோ அல்லது சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவோ முடியாது.


