TamilsGuide

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கு தற்காலிக விண்ணப்ப நடைமுறை அறிமுகம்

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு முறைமையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, குறித்த தரவு முறைமை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்தரமுல்ல, சுகுறுபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவினால் குறித்த சான்றிதழ்களை வழங்குதல், விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

குறித்த தரவு முறைமை செயலிழந்துள்ளதன் காரணமாக இந்தத் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தரவு முறைமை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படும் வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக நடைமுறையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவிக்கிறது.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை

www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, “Download Application” என்பதன் ஊடாக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் (Download) செய்து, அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் நிழற்படப் பிரதிகளுடன், clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (E-mail) அனுப்ப முடியும்.

இந்த நடைமுறையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், குறித்த விண்ணப்பதாரர்களின் பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் தடையகற்றல் பிரிவு நடவடிக்கை எடுக்கும். சான்றிதழ்கள் வழங்கப்படுவது தரவு முறைமை மீண்டும் செயற்படுத்தப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பணம் செலுத்தலும் மேற்கொள்ளத் தேவையில்லை.

எவ்வாறாயினும், இந்தத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், தரவு முறைமை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டவுடன், முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்று உரிய கட்டணத்தைச் செலுத்தி, மீண்டும் இணையவழி (Online) முறையின் ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்காக

ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளவர்களில், தடையகற்றல் அறிக்கைகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களின் குறிப்பு இலக்கங்களை (Reference Numbers) பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குறிப்பு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், பத்தரமுல்ல, சுகுறுபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவிற்கு நேரடியாக வந்து தங்களது சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் இச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இணையத்தளத்தில் குறிப்பு இலக்கங்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, தரவு முறைமை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அறிக்கைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தரவு முறைமையை விரைவாக மீண்டும் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரவு முறைமை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டவுடன், அது தொடர்பில் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுக்கும்.
 

Leave a comment

Comment