கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் இருந்த
புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.
அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒரு சில பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத்துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார்.
புலவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்த எம்.ஜி.ஆர்.
தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
தனது வீடு அடமானத்தில் இருப்பதையும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக்கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒரு வழியாக திக்கித்திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!
‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து!
‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப்பித்தன்.
"பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக்கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந்தித்தார்.
பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்தனின் தோள்களை ஆதரவாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண்டார்.
தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச்
சின்னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர்.
தலைவர் முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’
என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார்.
பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...
‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்
பால் மட்டும் சுரக்கும். அன்னை இதயம் அவரது இதயம்!
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
VR S Selvendhiran


