ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


