23 வயதான அமெரிக்க இளைஞரான ஜஸ்டின் அல்வோ, தனது தந்தையின் வேர்களைத் தேடி ஈக்வடார் அமேசான் பகுதிக்குப் பயணம் செய்தார். அவரது தந்தையின் வாழ்க்கைப் பயணம் ஒரு தொலைதூரக் காட்டுக் கிராமத்தில் தொடங்கி, பின்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு சீன உணவகத்துக்கு வந்தடைந்தது. அங்குதான் அவரது பெற்றோர் ஒருவரையொருவர் சந்தித்தனர்.
அங்கு ஜஸ்டின், 22 வயதான ஷுவர் இனத்தைச் சேர்ந்த சமையல்காரரான மரியாவை சந்தித்தார். இருவரும் இணைந்து அவரது சமூகத்தைப் பற்றிய ஆவணப்படங்களைப் படமாக்கத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களுக்கிடையே ஆழமான காதல் மலர்ந்தது.
அவர்களின் உறவு குறித்து அந்தச் சமூகத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். ஒருபாதி, ஜஸ்டின் வழங்கிய பரிசுகளாலும் அவர்களின் கலாச்சாரத்துக்கு அவர் காட்டிய மரியாதையாலும் கவரப்பட்டனர். மற்றொரு பாதி, அவர் மனித உறுப்புகளை கடத்தும் நபராக இருக்கலாம் என்று அஞ்சினர்.
அமேசான் காட்டில் வாழ்வது அவர்களுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தியது. ஜஸ்டின் விஷமுள்ள ‘மகாஞ்சே’ குழி விரியன்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டார். அதோடு, முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தால் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சியையும் எதிர்கொண்டார்.
ஒருமுறை புனிதமான ஆன்மிக விலங்காகக் கருதப்படும் போவா பாம்பைப் பிடித்ததால், ‘தீய ஆற்றல்’ நீங்கும் வரை கர்ப்பிணிப் பெண்களைச் சந்திக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் பாரம்பரியமாக அருந்தப்படும் புளிக்கவைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பானமான ‘சிச்சா’வை அருந்தியதால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியையும் அவர் சகித்துக்கொண்டார். பின்னர் அதே பானத்தை அவர் விரும்பத் தொடங்கினார்.
தனது தகுதியை நிரூபிக்க, ஜஸ்டின் 90 நிமிடங்கள் கடுமையாக முயன்று ஒரு மரத்தை கோடாரியால் வெட்டிச் சாய்த்தார். அதே பணியை உள்ளூர் ஷுவர் ஆண்கள் சுமார் 30 நிமிடங்களில் முடித்துவிடுவார்கள்.
அவரது மனமார்ந்த முயற்சி சமூகத்தினரின் மனதை வென்றது. இதையடுத்து ஜஸ்டின் அதிகாரப்பூர்வமாக மரியாவிடம் திருமணத்திற்காக தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இப்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கும் அவர்கள், 2026 ஜூன் 9 அன்று ஆலிவர் என்ற மகனை வரவேற்றனர்.
ஜஸ்டின் தனது பழைய அமெரிக்க வாழ்க்கையைவிட அமேசான் காட்டில்தான் அதிக மனநிறைவுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
‘ஒரு பெட்டிக்குள் வாழ்வது’ போன்ற வழக்கமான வாழ்க்கையை விட்டுவிட்டு, தலைக்கு மேலே பறக்கும் கிளிகள், ஊளையிடும் குரங்குகள் என இயற்கையால் சூழப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த அவர், இறுதியில் தனது வாழ்க்கைக்கான உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடித்தார்.


