TamilsGuide

இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ.33 டிரில்லியனை எட்டியது

2026 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரக் கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைஉணவு

அந்த அறிக்கையின்படி, ஜூன் 30 நிலவரப்படி மொத்தப் பொதுக் கடன் ரூ. 32.977 டிரில்லியன் ஆக இருந்தது.

இது மார்ச் மாத இறுதியில் இருந்த ரூ. 32.233 டிரில்லியனிலிருந்து அதிகரித்ததாகும் — அதாவது, இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ. 744 பில்லியன் அளவுக்கு இந்தக் கடன் அதிகரித்துள்ளது.

ரூபாய் மதிப்பில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், அமெரிக்க டொலர் அடிப்படையில் கணக்கிடும்போது கடன் இருப்பு குறைந்துள்ளது.

அதாவது, மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கடன் இருப்பு, ஜூன் மாத இறுதியில் 97.95 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. 

ஜூன் மாதத்திற்கான இக்கணக்கீடுகளில், ஒரு அமெரிக்க டொலருக்கு 336.6623 ரூபாய் என்ற காலாண்டு இறுதி மாற்று நாணய விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மார்ச் மாத இறுதியில் ரூ. 31.193 டிரில்லியன் ஆக இருந்த மத்திய அரசு கடன், தற்போது ரூ. 31.999 டிரில்லியன் என்ற அளவை எட்டி, மொத்தக் கடனில் பெரும்பகுதியை வகிக்கிறது. 

இதில், உள்நாட்டுக் கடன் ரூ. 19.203 டிரில்லியன் ஆகவும், வெளிநாட்டுக் கடன் ரூ. 12.796 டிரில்லியன் ஆகவும் இருந்தது.

அரசின் வெளிநாட்டுக் கடன் மார்ச் மாத இறுதியில் 37.47 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 38.01 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.

இது 540 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான உயர்வாகும். 

அரசின் மொத்த வெளிநாட்டுக் கடனில் பலதரப்பு (multilateral) கடன்கள் 38 சதவீதமாகவும், வணிகக் கடன்கள் 34 சதவீதமாகவும், இருதரப்பு (bilateral) கடன்கள் 28 சதவீதமாகவும் இருந்தன.

இருதரப்பு கடன் வழங்குநர்களில், 5.01 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையுடன் சீனா மிகப்பெரிய கடன் வழங்குநராகத் தொடர்கிறது.

அதைத் தொடர்ந்து ஜப்பான் 2.27 பில்லியன் அமெரிக்க டொலருடனும், இந்தியா 853.9 மில்லியன் அமெரிக்க டொலருடனும் உள்ளன.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அரசு உத்தரவாதம் பெற்ற கடன் 971 பில்லியன் ரூபாயாக இருந்த அதே வேளையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் சார்ந்த கடனின் அளவு சுமார் 7 பில்லியன் ரூபாயாக இருந்தது.

பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான கடன் புள்ளிவிவர அறிக்கை ஆகஸ்ட் 28 அன்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment