TamilsGuide

கனடாவில் சட்டவிரோத மீன்பிடி: இருவருக்கு அபராதம் - ஒருவருக்கு ஆயுட்காலத் தடை 

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவருக்கு 4,000 கனடிய டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 18 அன்று 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, ஸ்கார்பரோவைச் சேர்ந்த சுன்யாங் லியூ மற்றும் ஈஸ்ட் க்வில்லிம்பரியைச் சேர்ந்த மிஃபெங் லீ ஆகியோர் சட்டவிரோதமாக 'வாலி' ரக மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

சோதனையின் போது மிஃபெங் லீ அங்கிருந்து தப்பியோடிய போதிலும், பொலிஸாரின் உதவியுடன் பின்னர் கைது செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட காலத்தில் மீன்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு 1,050 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர் பிடித்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் நிரந்தரமாக அரசுடமையாக்கப்பட்டன.

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்தல், அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தப்பியோடிய குற்றங்களுக்காக லீக்கு 2,990 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 2 ஆண்டுகள் கண்காணிப்பு உத்தரவுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் மீன்பிடிப்பதற்கு அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'லேக் சுப்பீரியர்' ஏரிப் பகுதியில் வாலி மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றில் ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment