TamilsGuide

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அதன்படி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக, சூர்யா நடிப்பில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாளை நிறைவு செய்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இது குறித்து நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "கண்ணுங்களா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா! கருப்பு திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள் - இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், "ஒரு தேவதை கதை பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும், கருப்பு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது.

இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர். நன்றி இறைவா..! நன்றி மக்களே.! இதைவிட சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்க முடியாது.! கருப்பா, என்னுடன் வா" என்று குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment