இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.
6 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதல் மற்றும் பிரச்சினையில் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா பெரும் தோல்வி அடைந்தது.
இது நேரடியாக ஈரானுக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இதுகுறித்து ஈரான் அரச செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் அதில் கூறியதாவது:- ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாக கருதுகிறது.
இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து சரணாகதி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார போரை தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதாவது தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக்கும் எந்தவொரு நாடு அல்லது நிதி நிறுவனமும் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஹொர்முஸ் நீரிணை அமெரிக்காவின் ஒரு பகுதியென மீண்டும் ஒருமுறை ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, தீவிரமான பொருளாதாரத்தடைகளை அமெரிக்க முற்றுகையுடன் இணைப்பது, உலக நாடுகளின் இறையாண்மையைப் பறிக்கும் செயல். இது மீண்டும் ஒரு முழு அளவிலான பாரம்பரிய காலனி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்றுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் மற்றும் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் பாரிசில் சந்திக்க உள்ளனர்.
நீரிணையை தவிர்த்து மாற்று வழிகளில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து அவர்கள் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.


