எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக அரங்கில் ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைக் கௌரவிக்கும் ‘சரசவி திரியோ அபிமான்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது வடக்கு மாகாணப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 75 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசிலையும் பிரதமர் வழங்கி வைத்தார்.
மேலும், யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பிராந்தியத்தில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் போருக்கான காரணிகளை அகற்றிச் சமத்துவமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அரசு பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உடல்ரீதியான மற்றும் சமூக மனப்பான்மை சார்ந்த தடைகளைக் கடந்து அடைந்துள்ள வெற்றி ஏனைய இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் எனப் பாராட்டிய பிரதமர், குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசாங்கம் மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், மாணவர்கள் தங்களது கனவுகளுக்கு எந்த எல்லையையும் நிர்ணயிக்காமல் அயராது உழைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான முழுமையான ஆதரவை அரசாங்கமும் நாட்டு மக்களும் எப்போதும் வழங்குவார்கள் என்றும் பிரதமர் தனது உரையில் உறுதியளித்தார்.


