TamilsGuide

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடுமெனும் கதை மாறும்..

22 ஆகஸ்டு1958-ல் நாடோடி மன்னனில் #திமுக கொடியுடன் அறிமுகமான #எம்ஜியார்_பிக்ச்சர்ஸ் 11 மே 1973-ல்  உலகம் சுற்றும் வாலிபனில் #அதிமுக கொடியாக மாறியது.
#புரட்சித்தலைவர்× கருணாநிதி இருவரிடையே மோதல் பற்றியெறிந்துக் கொண்டிருந்த அந்த பரபரப்புக்கிடையே 11 மே 1973-ல்  வெளியான படம்தான் #உலகம்_சுற்றும்_வாலிபன். 
இந்த படத்தை வெளியிடவிடாமல் தடுக்க ஆளும் திமுக வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியது. 
இந்த படம் மதுரையில் ரிலீஸானால் தான் சேலை கட்டிக் கொள்வதாக திமுக-வின் மதுரை முத்து  சவால் விட.. 
படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி வெற்றி நடைபோட்டது.   
படம் வெளியான திரையரங்குதோரும்  சேலையை தொங்கவிட்டு அவரை சீண்டியதெல்லாம் தனியான சுவாரஸ்ய விஷயங்கள்.
(பின்னொரு நாளில் அவர் மக்கள்திலகத்திடமே சரணடைந்து மதுரையின் முதல் மேயராக பதவி ஏற்றது தனி கதை)
அதற்கிடையில் சென்னையில் போஸ்டர்களுக்கான வரியை திமுக வசமிருந்த மாநகராட்சி திடீரென உயர்த்தியது. கடும் மின்வெட்டு வேறு. 

எதற்குமே அசராமல், சென்னையில் 3 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இங்கு படத்தின் முன்பதிவுக்கு சென்னை அண்ணாசாலையில் ரசிகர்கள் நின்ற கியூ வரிசை அதற்கு முன் எந்த ஒரு படத்துக்கும் காணாத சாதனையாகும்.
வெளியூர்களுக்கு செல்லும் பிலிம் சுருள்களை கைப்பற்றி கொளுத்த விஷமிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவலறிந்தார் எம்ஜிஆர். எனவே பிலிம் சுருள்களை சில பெட்டிகளிலும், செங்கற்களை சில பெட்டிகளிலும் வைத்து கார், வேன் என்று மாறி மாறி அனுப்பி ஜெயித்தார்.
இப்படி பல நெருக்கடிகளை தாண்டி 25 வாரங்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்தது இந்தப்படம். எம்ஜிஆருக்கு தீவிர ரசிகர்கள் ஏராளமாக இருந்த மலேஷியாவிலும் பல நாட்கள் ‘ஹவுஸ்·புல்’லாக ஓடி சாதனைப் படைத்தான் இந்த ‘ வாலிபன் ‘.
இத்தனைக்கும் இது அரசியல் நெடி இல்லாத படம் தான். ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் பரபரப்பு மாற்றத்தால் , அதிமுக நிறத்துடனே படம் வெளியானது.  
படத்தில் உணர்ச்சி பொங்கும் டைட்டில் பாடலை கூடுதலாக சேர்த்தார் எம்.ஜி.ஆர். அது, சீர்காழி கோவிந்த ராஜனின் வெண்கலக் குரலில் முழங்கிய,
”நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..
நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்...
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை...
இல்லாமல் மாறும் ஒரு தேதி;
அந்த இல்லாமை நீங்கி
இந்நாட்டில் மலரும் சமநீதி..
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடுமெனும் கதை மாறும்..

 

பா.வே. முத்தமிழன்

Leave a comment

Comment