இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 25 கிலோ மீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான விமானப் பாதைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட சோதனைகளில் கொழும்பு – தென் கடற்கரை, கட்டுநாயக்க மற்றும் போர்ட் சிட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பாதைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக இரண்டு ட்ரோன் விமானங்கள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைபயணம்
சோதனைத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் ட்ரோன்களின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, பொருத்தமான விமானப் பாதைகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் முதன்மையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேவேளை, அவசரகால மற்றும் அனர்த்த மீட்புப் பணிகள், கடல்சார் மற்றும் கடற்படை நடவடிக்கைகளிலும் பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
பயணிகள் ட்ரோன்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று, அவை புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுவதாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை வணிக ரீதியாக ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


