TamilsGuide

எச்சரிக்கையை மீறி பயணித்த மீன்பிடி படகு விபத்து - மீனவர் மாயம்

கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்று (20) அதிகாலை சிலாபம் முகத்துவாரப் பகுதியிலிந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மீனவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

“Rashmika Putha” என்று பெயரிடப்பட்ட அந்தப் படகில் இரண்டு மீனவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ​​இன்று காலை 6.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த இரு மீனவர்களும் நேற்று (19) மதியம் 1.00 மணியளவில் சிலாபம் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவரைக் கண்டறியும் தேடுதல் நடவடிக்கையில் தற்போது பல மீன்பிடிப் படகுகள் இணைந்துள்ளன.

கடல் கொந்தளிப்பு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுத்திருந்த போதிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோசமான வானிலை எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும்போது, ​​மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment