2030-ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், பொதுச் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு வசதியை உறுதி செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்முறைகளின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது குறித்தும், வரும் செப்டம்பர் முதல் அனைத்துப் போக்குவரத்து அபராதக் கட்டணங்களையும் ‘govPay’ மூலமாக மட்டுமே செலுத்துவதற்கான நடைமுறைகளைச் செயல்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
அரசின் டிஜிட்டல் மாற்றச் செயல்முறைக்கு வலுவான பங்களிப்பை அளிக்கும் வகையில், பொதுத்துறைக்கான தகவல் தொழில்நுட்பச் சேவைகளைத் தீவு தழுவிய சேவையாக அமைப்பதில் கவனம் செலுத்துமாறும் இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.


