ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), டித்வா (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளமைப்பு, புனரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ளது. இலங்கைநிகழ்வுகள்
2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரை அமுல்படுத்தப்படவுள்ள “சூறாவளிக்குப் பிந்தைய மீளமைப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவு திட்டத்திற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் ஒப்பந்தம் நேற்று (18) நிதி அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ஷானன் கௌலினும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் சேதமடைந்த சாலைகள் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வகையில் மீளமைக்கப்படவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன அமைப்புகள் புனரமைக்கப்படவுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விவசாய வாழ்வாதார உதவிகளும் வீட்டு மீளமைப்பு நிதியுதவிகளும் வழங்கப்படவுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இத்திட்டத்தின் பிரதான செயல்படுத்தும் நிறுவனமாக செயற்படும்.
இந்தத் திட்டம் போக்குவரத்து உட்கட்டமைப்பு, நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் குடும்பங்களின் மீட்பு நடவடிக்கைகள் ஆகிய மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.
முதல் கட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) சூறாவளியால் சேதமடைந்த சாலை கட்டமைப்புகளை மீளமைத்து புனரமைக்கும்.
இரண்டாவது கட்டத்தில், நீர்ப்பாசன திணைக்களமும் மகாவலி அதிகாரசபையும் இணைந்து சேதமடைந்த நீர்ப்பாசன அமைப்புகளை மீளமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.
மூன்றாவது கட்டத்தின் கீழ், சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் வீடமைப்பையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில், விவசாய உதவிகளை விவசாய அபிவிருத்தித் திணைக்களமும், வீடமைப்பு உதவிகளை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமும் (NDRSC) மேற்கொள்ளவுள்ளன.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


