கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவிற்கு பிளாக்பஸ்டர் கம்பேக் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்களால் எழுப்பப்பட்டு வந்த நிலையில், 13 வருடங்களுக்கு பின் 'கருப்பு' திரைப்படம் அந்த வெற்றியை தேடி தந்தது. இப்படியொரு திரைப்படத்தைத்தான் சூர்யாவுடன் இருந்து நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம் என ரசிகர்கள் அனைவரும் கருப்பு திரைப்படம் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதன் பலனாக இப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படமும் இதுவே ஆகும்.
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 14-ஆம் தேதி திரைக்கு வந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்நிலையில், 4 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரூ. 128 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


