TamilsGuide

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.

குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து , அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர் .

இந்நிலையில் , சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து , அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.
 

Leave a comment

Comment