TamilsGuide

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்

காணாமல் போன பாடசாலைப் பாடப்புத்தக கையிருப்பு தொடர்பான சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்வி அமைச்சு துறைசார் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் தனித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, பாடப்புத்தகங்கள் போக்குவரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதல் சந்தேகநபர் அந்தப் புத்தகத் தொகுதியை சிலாபம் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பின்னர் அந்தப் புத்தகங்களை நாரம்மல பகுதியில் உள்ள மையமொன்றிற்கு மறுவிற்பனை செய்ததுடன், அங்கிருந்து அவை வத்தளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் கடந்த மே 24 ஆம் திகதி கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக இந்தப் பாடப்புத்தகங்களை ஒப்படைத்திருந்தது.

இந்தத் தொகுதியில் தமிழ் மொழிச் செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் முதலாம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பாடப்புத்தகங்கள் அடங்கியிருந்ததுடன், அவற்றின் மொத்த பெறுமதி 8 இலட்சம் ரூபாவை விட அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment