சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
இலங்கை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் விசேட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொதுமக்களின் நுகர்வுக்கு தகுதியற்ற சில உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல், உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் கையாளுதல் மற்றும் விற்பனை நிலையங்களை சுத்தமாகப் பேணுதல் தொடர்பில் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி, பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






















