TamilsGuide

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார்.

டித்வா புயலினால் மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை இழந்து வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீண்டும் தமது மீன்பிடித் தொழிலை ஆரம்பித்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைத்தனர்.

மேலும், திருகோணமலை மாவட்ட மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment