TamilsGuide

சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் நடிகர் வாகை சந்திரசேகர்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று வழங்கி சிறப்பித்தார்.

அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருதை வழங்கி கௌரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்ற பின் பேசிய வாகை சந்திரசேகர், இந்த விருதை தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்புத் திறமையால், குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் வில்லன்கள் வரை பலதரப்பட்ட வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார்.

கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

கலைத்துறை மட்டுமல்லாமல் அரசியலில் கால்பதித்தார் வாகை சந்திரசேகர். திமுக சார்பில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
 

Leave a comment

Comment