விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் திகதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 க்குள் நிகழும்.
இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்
இலங்கையில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதுதான். இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.
121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும்..
முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.
நடத்தை மாற்றங்கள்
இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


