கற்பிட்டி, பகுதியில் படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு
இலங்கை
கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரிப் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் ஏழு வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி ஆவர்.
குறித்த குடும்பத்தினர், மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காகப் படகில் சென்று கொண்டிருந்தபோது அப்படகுகவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






















