TamilsGuide

வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத மற்றும் கணிசமான வட்டி விகித உயர்வுக்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று இலங்கை மத்திய வங்கி கருதுவதாக அதன் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (11) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

பணவீக்கம் தற்போதைய அளவிலேயே உச்சத்தை எட்டும் என்றும், பின்னர் அடுத்த ஆண்டு 5% என்ற இலக்கை நோக்கி குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, இலங்கை மத்திய வங்கி மே மாதத்தில் வட்டி விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியது.

இது கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்வு என்பதால் சந்தைகள் ஆச்சரியமடைந்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பலவீனமான மீட்சிப் போக்குக்கு, இந்த நடவடிக்கை ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆற்றல் விலைகள் உயர்ந்ததன் காரணமாக, இலங்கையின் பிரதான பணவீக்கக் குறியீடு கடந்த ஜூலை மாதத்தில் 7.3% ஆக உயர்ந்தது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட மிக அதிகபட்ச உயர்வு விகிதமாகும்.

இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 8% வரை உயரக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வட்டி விகித உயர்வு பொருளாதாரத்தில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5% இலக்கை மீண்டும் எட்டும் என்றும் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர விரும்பும் நந்தலால் வீரசிங்கவின் அண்மைய கருத்துகள், குறைந்தது இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்காவது பணவியல் கொள்கையை 8.75% என்ற அளவில் நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன.

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 அன்று வெளியாகும்.

பெரும்பாலான எரிசக்தி இறக்குமதி நாடுகளைப் போலவே, இலங்கையும் மசகு எண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய மோதலால், முக்கிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகப் பாதைகள் முடங்கியுள்ளன.

இது உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் கடும் உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக, இலங்கை அரசு எரிபொருள் விலையை 35%-க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது; அத்துடன் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், புதன்கிழமைகளை பொது விடுமுறை நாளாகவும் அறிவித்திருந்தது. 

2022 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 7.3% சரிவைச் சந்தித்த நிதி நெருக்கடியிலிருந்து வலுவாக மீண்டு, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியைப் பதிவு செய்தது.

2026-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சியை தீவு நாடு எதிர்பார்த்திருந்தது.

இருப்பினும், உலகளாவிய பொருளாதாரச் சவால்களிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இறுதியில் வளர்ச்சிக் குறைவுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இந்த ஆண்டு 3% வளர்ச்சியை எட்டக்கூடும் என்று கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), அந்நாட்டின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக 695 மில்லியன் டொலரை விடுவிக்க ஒப்புக்கொண்டதுடன், மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வையும் ஆதரித்தது. 

எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பது இலங்கையின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைக் கணக்குகளில் (external accounts) புதிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்நியச் செலாவணி கையிருப்பைத் தொடர்ந்து சீராக அதிகரிப்பது தற்சமயம் மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது.

அதிகாரிகள் தங்கள் வெளிநாட்டு நிதி இருப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதால், மத்திய வங்கியின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பை தற்போதுள்ள சுமார் 6.6 பில்லியன் டொலரிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 8 பில்லியன் டொலராக உயர்த்த நந்தலால் வீரசிங்க இலக்கு வைத்துள்ளார்.

Leave a comment

Comment