புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் சர்வதேச ரீதியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
புதிய கடவுச்சீட்டின் தரம் காரணமாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த கடவுச்சீட்டை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாத நிலையில், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடவுச்சீட்டுக்கான கட்டணம் தொடர்ந்து 6,000 ரூபாயாக காணப்படும் நிலையில், புதிய கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுகளில் இடப்படும் குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசியும் வகையிலான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், இதன் காரணமாக சில நாடுகள் குறித்த கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் காணப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டிருப்பது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான நடவடிக்கையே என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்முதல் செய்வதற்கான விலைமனு கோரல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கடவுச்சீட்டுகளின் தரம், சர்வதேச ரீதியில் அவற்றை பயன்படுத்துவதில் ஏற்படுவதாகக் கூறப்படும் சிக்கல்கள் மற்றும் மின்னணு கடவுச்சீட்டு அறிமுகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.


