TamilsGuide

எட்மண்டனில் கொல்லப்பட்ட இந்தியருக்கு நகர மேயர் இரங்கல்

கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 

எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும் போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
 

Leave a comment

Comment