TamilsGuide

வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் - வடகொரியாவில் வினோதம்

வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.  
 

Leave a comment

Comment