TamilsGuide

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அரச பாடசாலைகள் (ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ளவை தவிர) இன்று (05) மீண்டும் திறக்கப்படுகின்றன.

கனமழை மற்றும் வானிலை சார்ந்த அனர்த்த அபாயங்கள் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், நிலவும் மோசமான வானிலையால் ஒன்பது மாவட்டங்களில் 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான சம்பவங்களால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு வீடு முழுமையாகவும் மேலும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அண்மைய நிலவர அறிக்கையின்படி, இடம்பெயர்ந்த மொத்தம் 3,538 பேர் தற்போது 51 தற்காலிகப் பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment