சுகாதார அமைச்சின் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு ‘ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம்’ என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியானது இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு ஆரத்தி நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள் என்பன இடம்பெற்றதன.
அதனைத் தொடர்ந்து கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சானது வேல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து வருடா வருடம் இந்த கண்காட்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றையதினம் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலர் உ. கவிதா, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இ.ஜமுனா ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வேள்ட்விசன் வட மற்றும் வடமேற்கு வலய முகாமையாளர் அ. ஐஜிட் நிசாந்தன், வேள்ட்விசன் யாழ்ப்பாணம் திட்ட முகாமையாளர் அ.அன்டன் ரோய் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் தாய்மார் கழகத்தினர், சமூக மட்ட அமைப்பினர், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது தானிய உணவு வகைகள், கடல்சார் உணவு வகைகள் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியம் சார்ந்த உணவு வகைகள் காட்சிப் படுத்தப்பட்டன.


