பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்து விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மதிப்பீட்டு செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவியை தடுக்கும் சர்வதேச நிதி செயலணி (FATF) வெளியிட்டுள்ள 40 பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நடைமுறை செயல்திறன் இந்த மதிப்பீட்டில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இதற்கான கள ஆய்வுகள் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் குறித்த பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆசிய பசுபிக் பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்ளும் இந்த தேசிய மட்ட மதிப்பீட்டு செயற்பாட்டில் சுமார் 25 அரச நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
மேலும், இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் பெறப்படும் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரசபை அமைக்கும் பணிகள் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.
இக்கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அமைச்சின் செயலாளர்கள், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


