TamilsGuide

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் சார்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தெரிவுக்குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு காண அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பை திருத்துவதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றாலும், அவசரமாக மாற்றங்களை மேற்கொள்வதை விட அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய மக்கள் இணக்கத்தை உருவாக்குவதே முக்கியம் என வலியுறுத்தினார். இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் அரசியல் மற்றும் சமூக சூழலை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணிக்கான சட்டபூர்வ உரிமையை வழங்கும் திட்டம், காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் 13,000 வீடுகள் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

மேலும், டித்வா அனர்த்தத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளும் வாடகை கொடுப்பனவும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

சந்திப்பின் இறுதியில், தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்வைப்பதற்காக இந்த கூட்டணியை உருவாக்கிய அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அதேவேளை, சமூகத்தில் தவறான புரிதல்கள் உருவாகாத வகையில் அனைத்து மக்களின் பொதுப் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a comment

Comment