அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.
ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் மீண்டும் உருவாகும்.
விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.
வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.
இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


