சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து திசை திருப்பியுள்ளதாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரானிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆதரவாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படையும் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முக்கிய வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மண்டப் நீரிணை பகுதியை ஹௌதிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், குறித்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தொடர்பில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களை இடைமறித்து வேறு திசைக்கு திருப்பி அனுப்பியதாக ஹௌதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல்கள் எந்த நாளில் அல்லது எப்போது இடைமறிக்கப்பட்டன என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதுவரை சௌதி அரேபிய அரசாங்கத் தரப்பிலிருந்தும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, ஜூலை 20 ஆம் திகதி முதல் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக சௌதி அரேபிய கப்பல்கள் பயணிப்பதற்கு ஹௌதி படைகள் தடை விதித்திருந்ததுடன், சௌதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


