கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் இதற்கான வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல் அறிவித்துள்ளார்.
57 வயதான கிறிஸ் அலெக்ஸாண்டர் இதுகுறித்து தனது இணையதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளாக டொராண்டோ நகரம் எந்தவித வளர்ச்சியும் இன்றி தேங்கிக் கிடக்கிறது.
இவ்வளவு திறமையும் ஆற்றலும் கொண்ட ஒரு நகரம் பின்தங்கி இருக்கக் கூடாது. டொராண்டோவைச் சிறந்த நகரமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் 2013 முதல் 2015 வரை கனடாவின் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 2003 முதல் 2005 வரை ஆப்கானிஸ்தானுக்கான கனடியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் நகரமன்ற உறுப்பினர் பிராட் பிராட்போர்ட் ஆகியோருக்கு எதிராகக் கிறிஸ் அலெக்ஸாண்டர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, டொராண்டோவின் மேயர் பதவியைப் பிடிக்க மொத்தம் 32 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


